இந்திய அணி கேப்டன் கோலி சாதனை – மூன்று ஆண்டுகளாக ஆயிரம் ரன்கள்..!

இந்திய அணி கேப்டன் கோலி சாதனை – மூன்று ஆண்டுகளாக ஆயிரம் ரன்கள்..! 
 
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 
 
ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி 139 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்மூலம் 24-வது சதத்தை எட்டிய கோலி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார்.
 
72-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலி 123 இன்னிங்சில் பேட்டிங் செய்து 24 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைசதங்கள் உள்பட 1,018 ரன்கள் (9 டெஸ்ட்) சேர்த்துள்ளார். இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் கோலி தான். 
 
விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.  இவர் ஏற்கனவே 2016-ம் ஆண்டில் 1,215 ரன்களும், 2017-ம் ஆண்டில் 1,059 ரன்களும் எடுத்துள்ளார். இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் இவர் என்பதும், ஒட்டுமொத்த அளவில் 6-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
 
ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (தொடர்ந்து 5 ஆண்டு), ஸ்டீவன் சுமித் (4 ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இங்கிலாந்தின் டிரஸ்கோதிக், கெவின் பீட்டர்சன் (தலா 3 ஆண்டு) ஆகியோர் இச்சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
Exit mobile version