அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ரகசிய விசாரணை

அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு எதிராகக் கடந்த வாரம் 300 பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து, போலீசார் இந்த வழக்கை அவசரமாக விசாரணை நடத்துவதால், நியாயமான விசாரணை நடக்காது என்றும், இதனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதிஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமி மீதான பாலியல் வழக்கு என்பதால், ரகசியமாக விசாரணை மேற்கொள்ள உள்ளதாகக் கூறி, வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Exit mobile version