விண்ணில் பாய்கிறது PSLV C-42 ராக்கெட்..! – சென்னைவாசிகளும் காணலாம்..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, PSLV C-42 ராக்கெட் இன்று இரவு 10 மணி 7 நிமிடங்களில் விண்ணில் ஏவப்படுகிறது.

இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதற்கான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று தொடங்கியது.

வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்காக நோவாசர் செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காக எஸ்1-4 செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது.

நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.

44.4 மீட்டர் உயரம் கொண்ட PSLV C-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது. இது இந்தியாவின் 44-வது PSLV ராக்கெட் ஆகும்.

இன்று இரவு 10 மணி 7 நிமிடங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதால், சென்னைவாசிகள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடியே ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப் பாய்வதை காணலாம்.

வானம் மேக மூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், பொதுமக்கள் அனைவரும் இதனை கண்டுகளிக்க முடியும். இது வானில் ஒரு வர்ண ஜாலம் போல் காட்சி அளிக்கும்.

Exit mobile version