மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. இதனையடுத்து, அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று 90 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கன அடியாக அதிகரித்த நிலையில், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியில் இருந்து, 95.73 அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அணையில் நீர் இருப்பு 59.44 டிஎம்சியாகவும், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி தண்டோரா மூலம்  அறிவுறுத்தப்பட்டுள்ளது

Exit mobile version