"மக்களுக்கு தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது"

மக்களுக்கு தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை அவர் திறந்துவைத்தார்.

பின்னர் துணை முதலமைச்சரும், அமைச்சர் பாண்டியராஜனும் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர், வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என்றார்.

வேதாந்தா நிறுவனம் ஆளுமை செலுத்த முயற்சிக்கிறது, அதை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும் என்று அவர் கூறினார். மக்களுக்கு தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

கருணாஸ் கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக கூறிவருவதாக குறிப்பிட்ட அவர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவதாக கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார் அவர். நக்சல் நடமாட்டம் தமிழகத்தில் இல்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

Exit mobile version