மகளிர் ப்ரீமியர் லீக் : ஆர்சிபி மீண்டும் மீண்டும் தோல்வி..!

நேற்றைய மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பெங்களூருவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் வெளியேறினார்.இந்தத் தொடரில் மந்தனா மிகவும் மோசமான பார்மில் ஆடி வருகிறார். சோபி டெவின் 21 ரன்கள் வெளியேற இறுதி வரை களத்தில் நின்றார் எல்லீஸ் பெர்ரி. அவர் 5 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளையும் சிதறடித்து 67 ரன்கள் சேர்த்து இறுதிவரை தனது விக்கெட்டை இழக்காமல் களத்தில் நின்றார். அவருக்கு உறுதுணையாக ரிச்சா கோசும் 37 ரன்கள் அடித்து 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் அடிக்க காரணமாயிருந்தார். டெல்லி சார்பாக ஷிக்கா பாண்டே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பிறகு 151 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியானது இரண்டு பந்துகள் மீதம் இருந்த நிலையில் இலக்கை எளிதில் விரட்டிப் பிடித்தது. கேப்டன் மேக் லென்னிங்க் 15, ஷவாலி வர்மா 0 ரன்களுக்கு வெளியேறினாலும், ஆலிஸ் கேப்சி 38,  ஜெமிமா ரொட்ரிகஸ் 32 எடுத்தனர். ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மேரிசன் கப் மற்றும் ஜெஸ் ஜோன்சன் முறையே 32, 29  ரன்கள் எடுத்து இலக்கை எட்டினர். பெங்களூர் அணி சார்பாக சோபனா ஆஷா 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கும், பெங்களூர் அணி கடைசி இடத்திற்கும் சென்றது. இந்தத்  தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெங்களூர் அணி பெறவில்லை எனபது குறிப்பிடதக்கது. ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வி.  ப்ளேயர் ஆஃப் த மேட்சினை ஜெஸ் ஜோன்சன் பெற்றார்.

Exit mobile version