காப்பீடு பணத்துக்காக கணவனைக் கொன்ற மனைவி கைது

3 கோடி ரூபாய் விபத்து காப்பீடு தொகைக்காக உறவினருடன் சேர்ந்து கணவரை எரித்துக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்த ரங்கராஜன், விபத்தில் படுகாயமடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். மனைவி ஜோதிமணி மற்றும் உறவினர் ராஜா ஆகியோர், ரங்கராஜனை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து, ஆம்னி வேனில் அழைத்து வந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வேனுடன் சேர்த்து ரங்கராஜனை எரித்துவிட்டு, வேன் தீப்பற்றி எரிந்ததாக நாடகமாடினர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, லட்சக் கணக்கில் கடன் இருப்பதாகவும், கணவரின் 3 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்காக அவரை எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜோதிமணியையும், ராஜாவையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version