அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

 

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தாக்கத்தால் அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும் அது மேலும் வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் மாலத் தீவு, லட்சத்தீவு பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையும் நீடித்து வருவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version