வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகள் தீவிரம்

முதுமலையில் வறட்சி அதிகரித்துள்ளதால் , விலங்குகளின் தாகத்தை போக்க, வெளிவட்ட பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், குடிநீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் நடப்பாண்டு மழை குறைவாக பெய்துள்ளது. இதனால் கோடைக்கு முன்னதாகவே வனங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து, வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதுமலையில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில், சுழற்சி முறையில் குடிநீர் ஊற்றப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, முதுமலை வெளிவட்ட பகுதிகளிலும், வனத்துறையினர், வாடகை வாகனங்கள் மூலம் குடிநீர் எடுத்து சென்று தொட்டிகளில் ஊற்றி, வன விலங்குகளின் தாகத்தை போக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் கோடைக்காலம் முடியும் வரை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version