மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலுக்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தின் ஆட்சேபனை கவனத்தில் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், புதிய அணை கட்ட முடியாது என்று அதன் தலைவர் மசூத் உசேன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் 2வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ள கர்நாடக அரசுக்கு இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு, மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்றும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே மேகேதாட்டு அணையை கட்டுவதாகவும், காவிரி தங்கள் பகுதியில் இருப்பதால், அணை கட்டுவதற்கு உரிமையுள்ளது என்றும் கர்நாடகம் வாதிட்டது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், கட்டுமான தொகையை நீர்வள ஆணையமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேரள தரப்பு வாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், அணை கட்ட அனுமதி அளித்த மத்திய நீர்வள ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

 

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ள ஆட்சேபனை கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், அணை கட்டுவதற்கு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை என்றும் அவர் உறுதிபட கூறினார்.

Exit mobile version