தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், 2 கோடியே 92 லட்சம் ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 98 லட்சம் பெண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 472 பேர் மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பதாக பலர் தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் இன்றும், நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களை அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version