வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் – சத்யபிரதா சாகு தகவல்!

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே 2-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 2ம் தேதி எண்ணப்படுகின்றன. தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன், சத்யபிரதா சாகு காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் பணியாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பான இடைவெளியுடன் மேஜைகள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாலை 5 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Exit mobile version