"4 குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு "

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து விழுந்து 4 குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் பலியான துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பேரணாம்பட்டு பகுதியில் மழை வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் சென்றதால், அஜீஜியா தெருவில் உள்ள இரண்டு குடும்பத்தினர் நேற்றிரவு அருகிலிருந்த ஒரு வீட்டின் மாடியில் சென்று தங்கியுள்ளனர்.

மொத்தமாக அந்த கட்டிடத்தில் 18 பேர் இருந்துள்ளனர். இன்று காலை எதிர்பாராமல் அந்த கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து அக்கம்பக்கத்தினரும், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், பெண்கள் என 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் பேரணாம்பட்டு, குடியாத்தம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல பாண்டியன் மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆறுதல் கூறினார். உயிரிழப்பு காரணமாக அந்தப் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 

Exit mobile version