குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் நேற்று குற்றாலத்தின் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்து காவல்துறையினர் உத்தரவிட்டனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், இன்று அதிகாலை முதல் தடை நீக்கப்பட்டு அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பெண்கள் பகுதியில் இன்னும் வெள்ளம் குறையாத காரணத்தால், அங்கு ஓரமாக நின்று குளிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version