தனுஷ்கோடியை தாக்கிய புயலின் 54 வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

1964ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் உருவாகிய புயல் தனுஷ்கோடியை தாக்கி அழித்தது. கொடுங்கனவாக பார்க்கப்படும் இந்நிகழ்வின் 54ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

துறைமுகம், ரயில்நிலையம், தலைமை தபால் நிலையம், 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் என ராமேஸ்வரம் தீவின் முக்கிய பகுதியாக விளங்கியது தனுஷ்கோடி. துறைமுகம் வரை பயணிகள் ரயில் செல்லும் வகையில் அப்போதே அமைக்கப்பட்டிருந்தது. இது எல்லாம் 1964, டிசம்பர் 26ஆம் தேதிக்கு முந்தைய காட்சிகள். இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியையும் அங்கு வாழ்ந்த மக்களையும் ஒரு புயல் ஒரேடியாக விழுங்கிவிட்டது.

1964ஆம் ஆண்டு டிசம்பர் 22ம்தேதி தொடங்கி நான்கு நாட்கள் நீடித்த அந்த கோரப் புயலால், தனுஷ்கோடி கடல் நீரில் முற்றிலுமாக மூழ்கியது. இரவில் 240 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கடும் சூறாவளியால் அத்தனை இடங்களும் அழிந்தன. 800-க்கும் மேற்பட்ட மக்கள் புயலால் இறந்தனர். 200 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பாம்பன் – தனுஷ்கோடி பயணிகள் ரயில் ஒன்று கடலில் மூழ்கியது. அனைத்து பயணிகளும் கடலில் மூழ்கி பலியாகினர். புயலை நேரில் பார்த்தவர்களிடம் 50 ஆண்டுகள் கடந்த பின்பும் அதன் பதற்றம் இன்னும் குறையவில்லை. தங்களுக்கு நடந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று கதறுகிறார்கள்.

உருக்குலைந்த தேவாலயமும், சிதிலமடைந்த கோயிலும், சொற்பமான மீன குடியிருப்புகளும் தான் இன்று தனுஷ்கோடியின் அடையாளமாக எஞ்சி உள்ளது.

கோரப் புயல் விட்டுச் சென்ற சுவடுகளை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் தனுஷ்கோடிக்கு வருகை தருகின்றனர். புயல் சுவடுகளை கண்டு, மறைந்த பிரமாண்ட நகரை மிரட்சியுடன் பார்த்துச் செல்கின்றனர்.

Exit mobile version