டிஎன்பிஎல்: காரைக்குடியுடனான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில், காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சார்பில் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த இருவரும் தங்களது அரைசதத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய ஹரி நிஷாந்த் 81 ரன்களும், ஜெகதீசன் 78 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 17 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

 

Exit mobile version