மக்கள் நீதி மய்ய தலைவருக்கு தமிழக அமைச்சர் பதிலடி

தமிழக அமைச்சர் ஒருவருக்கும், மக்கள் நீதி மய்ய தலைவருக்கும் இடையிலான சண்டை வலுத்து வருகிறது. ஏற்கனவே அமைச்சர் கூறிய கருத்துக்கு, மக்கள் நீதி மய்ய தலைவர் பதிலளித்த நிலையில், அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர்.

முன்னதாக, மக்கள் நீதி மய்யம், கருவிலேயே அழிக்கப்படவேண்டிய கட்சி என்று கூறியிருந்தார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இப்படி கூறிய அமைச்சர் ஒரு தீய சக்தி என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

இந்நிலையில், விருதுநகர் ஆய்வு மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தான் நல்லவன் என்பதால் தான், 6 முறை மக்கள் தன்னை வெற்றி பெற வைத்ததாக கூறினார். இதிலிருந்து, தாம் நல்ல சக்தி என்று நிரூபித்து விட்டதாகவும், நடிகர் கமல் ஏதாவது ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அவர் நல்ல சக்தியா, தீய சக்தியா என்று நிரூபிக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தன்னை பற்றியும், கமல்ஹாசனை பற்றியும் மக்களுக்கு தெரியும் என்றும், தன்னை நம்பி வந்த கவுதமியை கைவிட்டவர் கமல்ஹாசன் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். தன் மகளுக்காக தான் கமல்ஹாசனை விட்டு விலகுவதாக கவுதமி மனமுடைந்து கூறியதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இதன் மூலம், மக்களுக்கு யார் தீய சக்தி என்று தெரியும் என்றும் கூறியுள்ளார்.

 

Exit mobile version