ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

கொடைக்கானல் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே மணியார் கெஜம் ஆற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே மணியார் கெஜம் ஆறு உள்ளது. இந்த ஆற்றுப்பகுதியை ஒட்டிய இடத்தில் பள்ளி மாணவர்கள் 5 பேர் விளையாட சென்றிருந்தனர். அவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது, பந்து ஆற்றில் விழுந்துள்ளது. ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க சென்ற ஆனந்த் என்ற மாணவர், ஆற்றில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற இரண்டு மாணவர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர். இதில், மூன்று பேரும் ஆற்று நீரில் மூழ்கி மாயமாகினர்.

இதை தொடர்ந்து உடன் வந்திருந்த மற்ற நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து மாணவர்களை தேடும்பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் மூவரையும் சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது. இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version