திருவண்ணாமலை அருகே உள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திம்மையன் ராஜா கோட்டையை சீரமைத்து சுற்றுலா தளமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துர்கம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்கம் கோட்டையில் திம்மையன் என்ற ராஜா மற்றும் ராணி வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இக்கோட்டையில் ராஜசபைக்கூடம், 2 கிலோ மீட்டர் அளவில் சுரங்கப்பாதை, வற்றாத சுனை மேலும் கோட்டையை சுற்றி எதிரிகளை தாக்க குண்டுத்தாக்குதல் துளைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையின் மீது ஆங்கிலேயர்கள் நடத்திய தாக்குதலில் ராஜசபை குண்டுகளால் துளைக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. ராஜா மற்றும் மந்திரிகள் சுரங்க பாதை வழியாக தப்பித்து செஞ்சி கோட்டைக்கு சென்ற போது வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் வாய்வழி கதைகள் கூறுகின்றன. இந்தநிலையில் துர்கம் கிராமத்திற்கு பெருமையாக விளங்கும் இக்கோட்டை சிதிலமடைந்து காணப்படுவதாகவும் இதனை சீர் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.