ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல்பத்து உற்சவம் துவக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல்பத்து உற்சவம் துவங்கியுள்ளது. வருகிற 18-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து திருமொழி திருவிழா இன்று துவங்கியுள்ளது. இந்த விழாவையொட்டி, நம்பெருமாள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

விழாவின் முக்கிய நிகழ்வான மோகினி அலங்காரம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. 18-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கோயிலில் ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து 27-ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் மறுநாள் நம்மாழ்வார் மோட்சமும் நடைபெற உள்ளது. பகல்பத்து உற்சவத்தையொட்டி இன்று நம்பெருமாள் நீலமுடி காசுமாலை அலங்காரத்தில், அர்ச்சுன மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புக்காக கோவிலைச் சுற்றி 128 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version