பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருக்கும் : டிரம்ப் நம்பிக்கை

வட கொரிய அதிபருடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வட கொரியாவில் இருக்கும் அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில், முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் கும் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இரண்டாவது முறையாக இரு தலைவர்களும் வியட்நாமில் உள்ள ஹனோய் நகரில் நாளை சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்புக்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் நேற்று முன் தினம் ரயில் மூலம் ஹனோய் நகருக்கு புறப்பட்டார். 60 மணி நேர பயணத்துக்கு பிறகு கிம் ஜாங் வியட்நாம் சென்றடைந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பும் வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக இந்த பேச்சு வார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக அமையும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version