மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு

காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பை மீறும் விதமாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ள கர்நாடக அரசுக்கு இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

கர்நாடக அரசு மேகதாது குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே மேகதாது அணையை கட்டுவதாக காவிரி ஆணைய வாரிய கூட்டத்தில் கர்நாடகம் வாதிட்டது.

கூட்டம் தொடங்கும் முன்பு ஆணைய தலைவர் மசூத் ஹூசேன், கஜா புயல் மற்றும் கேரள புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

 

Exit mobile version