அதிமுகவிற்கே இரட்டை இலைச் சின்னம் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவிற்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளடக்கிய அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இத்தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பினர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் ஆணையம் முறையாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னரே, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதாக வாதிட்டார். இந்நிலையில் இதுகுறித்தான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வெளியிட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கே இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உண்மையான அதிமுக நாங்கள் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். டெல்லி உயர் நீதிமன்றம் இரட்டை இலையை அதிமுகவுக்கு உறுதி செய்து, அதிரடி தீர்ப்பு வழங்கியபின், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Exit mobile version