தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற பிரான்ஸின் நோட்ரேடேம் தேவாலயம், 5 ஆண்டுகளுக்குள் சீரமைக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் மெக்ரான் உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே டேம் என்னுமிடத்தில், 850ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் பலத்த சேதமடைந்தன. தேவாலய கோபுரம் ஒன்றும் சரிந்து விழுந்தது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் பார்வையிட்ட அந்நாட்டின் அதிபர், இம்மானுவேல் மெக்ரான், அடுத்த 5 ஆண்டுகளில் தேவாலயம் முழுவதும் சீரமைக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் தேவாலயத்தை புனரமைக்க பொதுமக்களிடம் இருந்து நிதி குவிந்து வருகிறது.