தீவிரவாத அச்சுறுத்தலையடுத்து மதுரை விமானநிலையத்திற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு

ஜம்மு, காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து மதுரை விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தவோ, விமானநிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவோ வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து விமானநிலையங்களுக்கும் உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு முகமை பாதுகாப்பு குறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இதையடுத்து நாட்டின் அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மதுரை விமானநிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் ஐந்தடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version