வங்கி வாடிக்கையாளர்களிடம் கைவரிசை காட்டும் கும்பல் கைது

வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் ஆந்திர கொள்ளையர் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் கடந்த சில மாதங்களாக வங்கியில் பணத்தை எடுத்து செல்லும் முதியவர்கள், வியாபாரிகள் ஆகியோரின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதனையடுத்து இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொள்ளையர் 6 பேரை திருவான்மியூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெசன்ட் நகர் முதல் கேளம்பாக்கம் வரை சுமார் 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுவது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் ஆந்திராவை சேர்ந்த தனபால், கங்கா, திருப்பி, வெங்கடேஷ், ஹைதராபாத்தை சேர்ந்த ராஜீவ், மற்றும் சென்னையை சேர்ந்த சரவணராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள், 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையரை பிடித்த காவலர்களை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Exit mobile version