"தேர்தலில் விழிப்புடன் பணியாற்றுங்கள்" – அதிமுக தலைமை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தொண்டர்கள் விழிப்புடன் பணியாற்றி அதிமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் திட்டங்களையும் , அரசின் தவறுகளையும் அடித்தட்டு மக்கள் வரை ஆணித்தரமாக கொண்டு சேர்க்கக்கூடிய அமைப்பு, உள்ளாட்சி அமைப்பு என்று தெரிவித்துள்ளனர்.

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகிய இருபெரும் தலைவர்களின் மக்கள் பேரியக்கமான அதிமுகவுக்கு தேர்தல் என்பது புதிதல்ல என்றும், கடந்த காலங்களில் தேர்தல்களை நாம் நேர்மையாகவும், நியாயமான முறையிலும் சந்தித்து மக்களின் ஏகோபித்த பேராதரவைப் பெற்று மக்கள் பணியாற்றி இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், மக்களின் ஏகோபித்த பேராதரவை அதிமுக பெற்றிருந்த போதிலும், நிறைவேற்ற இயலாத, உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை மக்களிடத்திலே அளித்து, திமுக வெற்றி பெற்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், இதே போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க காத்திருக்கக்கூடிய, சாயம் வெளுத்த நரியாகவும், காலுடைந்த பரியாகவும் இருக்கக்கூடிய, திமுக, முயற்சி செய்யும் என்றும்,

ஆனால், மக்கள் எப்போதும் போல உண்மையின் பக்கம் இருக்கும் அதிமுகவுக்கு பேராதரவை வழங்க வேண்டும் என்று, வாக்காள பெருமக்கள் அனைவரையும் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிமுக என்னும் மாபெரும் பேரியக்கம், தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது, ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு முறையும், சட்டமன்றத் தேர்தலை ஒரு முறையும், நாடாளுமன்றத் தேர்தலை இரு முறையும், ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் அமைதியான முறையிலே, வாக்காளர்களை மட்டுமே நம்பி நடத்தி முடித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், வன்முறைக்கும், அராஜகத்திற்கும் பேர்போன திமுக, வெறும் 9 மாவட்டங்களுக்கு மட்டும் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை, இரண்டு கட்டங்களாக நடத்த முடிவெடுத்திருக்கிறது என்றும்,

கடந்த நான்கு மாதங்களில் மக்களிடத்தில் முழுமையாக செல்வாக்கை இழந்துள்ள திமுக, உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்றுவதற்கு அரசு இயந்திரத்தையும், அரசு அதிகாரிகளையும் தன்னுடைய கைப்பாவைகளாக மாற்றி வெற்றிபெற முயலும் என்றும் எச்சரித்துள்ளனர்.

எனவே, கழக உடன்பிறப்புகள் மற்ற தேர்தலைப் போல இந்தத் தேர்தலை எண்ணாமல், கூடுதல் விழிப்புடனும், கண் துஞ்சாமல், இமை மூடாமல், தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், அதிமுக முகவர்கள் வாக்குப்பதிவை உன்னிப்பாக கண்காணித்து, வாக்குப்பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும், அன்று காலை 7 மணி முதலே வாக்களிக்குமாறு செய்திட வேண்டும் என்றும்,

வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மக்கள் செல்வாக்கை முழுவதுமாக இழந்த விடியா அரசுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில், பங்களிப்பும், வாக்களிப்பும் இருக்க வேண்டும் என கழக உடன்பிறப்புகளையும், வாக்காளப் பெருமக்களையும் உள்ளன்போடு வேண்டி, விரும்பி கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அங்கிருந்து வெளியில் வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்களும், அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள Chief Agent-களும், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

கழக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள் என்றும்,

இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும்,

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version