363 மரங்களோடு சேர்த்து வெட்டப்பட்ட மனிதர்கள்… சிப்கோ இயக்கத்தின் ரத்த மரங்கள் கதை

சிப்கோ இயக்க நிறுவனரும் சூழலியலாளருமான சுந்தர்லால் பகுகுணா இன்று கொரோனாவால் உயிரிழந்தார்.

வனப்பாதுகாப்புக்காக இயங்கிவரும் அமைப்புகளில், இந்தியாவின் அழுத்தமான இயக்கமாக சிப்கோ இயக்கம் இருப்பதற்கு அதன் உறுதித்தன்மை காரணம். அந்த உறுதித்தன்மைக்கு உதாரணமாக, ஒரு மரத்தை முன்னிட்டு பிஷ்னோய் மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமை ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம்.

கி.பி. 1730ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங், தனது அலுவல் வசதிக்காக புதிதாக ஒரு அரண்மனையை மார்வார் என்ற வனப்பகுதியில் அமைக்க நினைத்தார். ஆனால் அந்த பகுதியில் இருந்த மரங்கள் அவரது விருப்பத்திற்கு தடையாக இருந்தது. அந்த மரங்களை வெட்ட தனது ஆட்களை அனுப்பினார்.

ஆனால் அந்த பகுதியில் வாழ்ந்து வந்த ‘பிஷ்ணோய்’ என்ற இன மக்கள் மரங்களை தெய்வமாக கருதி வாழ்ந்து வந்திருக்கின்றனர். மன்னரின் ஆணையை கேட்ட மக்கள் முடிந்தவரை தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் பலன் அளிக்கவில்லை. மன்னரின் உத்தரவின் படி வீரர்கள் மரங்களை வெட்ட வந்தனர். மரங்களை வெட்டுவதற்கு முன்னர் தம்மை வீழ்த்தச் சொல்லிப் பெண்களும் குழந்தைகளும் மரங்களைக் கட்டிப்பிடித்துப் போராடினர்.

வீரர்களும் மன்னனின் உத்தரவை மீற முடியாமல், மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான அம்ரிதா தேவியையும் அவரின் குழந்தைகளையும் முதலில் வெட்டிச் சாய்த்தார்கள். இப்படியே 363 மரங்களையும் அதனை கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டி சாய்த்தனர். அதன்பின்னர் மனம்இளகிய மன்னர் இந்த இடம் வேண்டாம் சொல்லி, போர்வீரர்களை திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார்.

இந்த மக்களின் போராட்டம் தான் இந்தியளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபெற்ற முதல் எதிர்ப்பு. அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்வை ‘சிப்கோ இயக்கம்’ என்று பெயரிட்டனர்.

இந்த நிலையில் இந்த இயக்கத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்த சுந்தர்லால் பகுகுணாவுக்கு, இந்திய அரசு, 1981-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தது. ஆனால் அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், ”இமய மலைப் பகுதியில் தினம் தினம் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. பாரத மாதாவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த ‘வளமான மண்’, கடலை நோக்கித் தினமும் போய்க்கொண்டு இருக்கிறது. அது என்று தடுக்கப்படுகிறதோ, அன்றுதான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version