ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால்வாய் பணி!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே 98 விழுக்காடு மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்த நிலையில் பணிகள் எதுவும் முடியாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் மழை நீர் வடிகால்வாய் அகலப்படுத்தும் பணி கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இன்னும் முடிவடையாமல் உள்ளது.
சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இப்பணிகள், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே 98 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்திருந்தார். ஆனாலும் பணிகள் எதுவும் முழுமையடைவில்லை.

சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலை, விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலை, கோடம்பாக்கம் காம்தார் நகர் போன்ற இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் நடைபெற்று வரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்றும் முறைகேடுகள் நடப்பதாகவும் கூறப்படுகின்றது. விடியா திமுகவின் ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக செயல்படுவது வழக்கமானதுதான். ஆனால் பாதிக்கப்படுவது ஆட்சியாளர்களோ, மாநகராட்சி மேயரோ அல்ல, பொதுமக்கள்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

Exit mobile version