சிலை கடத்தல் -சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதற்கு எதிரான வழக்கு: இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார் என உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை, சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுருந்தது.

வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதியன்று வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று பிற்பகல் அளிக்க உள்ளனர். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறும் நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version