தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரைக் கைது செய்து இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், ஜெகாதாப்பட்டினத்தைச் சேர்ந்த வாசு என்பவருக்குச் சொந்தமான ஒருபடகைப் பறிமுதல் செய்ததுடன், அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதேபோல், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்குச் சொந்தமான படகைப் பறிமுதல் செய்ததுடன், அதிலிருந்த 4 மீனவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் காங்கேசன்துறைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இலங்கைக் கடற்படையின் கைது நடவடிக்கை, தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version