ஐந்து தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

தலைமன்னார் அருகே மேலும் ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

பாம்பனை சேர்ந்த ஐந்து மீனவர்கள், ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். தலைமன்னார் அருகே அவர்களை மறித்த இலங்கை கடற்படை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தது. தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று, மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐந்து மீனவர்களுடன் சேர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும், 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரை வரும் 27ம் தேதிவரை காவலில் வைக்க அந்நாட்டின் ஊர்க்காவல்படை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த இரு தினங்களாக இலங்கை கடற்படையினரால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் மற்றும் அவர்களது 6 படகுகளை இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே சிறைபிடித்தனர்.

Exit mobile version