ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் பிரதமராக நீடிப்பார்- சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று சபாநாயகர் அறிவித்திருப்பது இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேன, புதிய பிரதமராக ராஜபக்சேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இருப்பதால் தானே பிரதமராக தொடர்வதாக ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக அறிவித்தார். இதனால் இலங்கை நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் 16ஆம் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

இந்தநிலையில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் நீடிப்பார் என்று சபாநாயகர் ஜெயசூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதிபர் சிறிசேனவுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் எனக் கூறியுள்ளார். நாடாளுமன்றம் சுயமாக பிரதமரை தேர்வு செய்யும்வரை ரணில் பிரதமராக நீடிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், சபாநாயகர் ஜெயசூர்யாவின் இந்த அறிவிப்பு இலங்கை அரசியலில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

இதனிடையே 16 எம்.பி-க்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கே பிரதமராக தொடர ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகி விட்டது.

Exit mobile version