இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குணதிலகா 6 சர்வதேச போட்டியில் விளையாட தடை

கொழும்புவில் கடந்த 23ஆம் தேதி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது இலங்கை அணி வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையில் குணதிலகாவுடன், அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி தங்கிய அவரது நண்பர் ஒருவர், நார்வே நாட்டு இளம்பெண்ணை கற்பழித்த புகாரில் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குணதிலகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் தூங்கிய போது, நண்பர் என்ன செய்தார் என்பது தனக்கு தெரியாது என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இ’துகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியமும்  குணதிலகாவிடம் விசாரணை நடத்தியது. அதில் வீரர்களின் ஒப்பந்த விதிகளை மதிக்காமலும், வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு புறம்பாக  நடந்து கொண்டது உறுதியானது. இதனையடுத்து 6 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட குணதிலகாவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. முந்தைய  டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் உள்ளிட்ட எந்தவித சலுகையும் அவருக்கு வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டும் குணதிலகாவுக்கு 6 சர்வதேச போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version