சிவகாசியில் தினசரி, மாதாந்திர காலண்டர் தயாரிப்பு பணி தீவிரம்

இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தினசரி மற்றும் மாதாந்திர காலண்டர் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. புத்தாண்டு என்றாலே அனைத்து தரப்பு மக்களும் முதலில் வாங்கும் பொருள் காலண்டர். பட்டாசு தயாரிப்பை தொடர்ந்து, தேசிய அளவில் சிவகாசியில் காலண்டர் உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் காலண்டர்கள் தயார் செய்யப்படுகின்றன. இங்கு காலண்டரை முழுமையாக தயாரிக்கும் 20 பெரிய நிறுவனங்களும், 300க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் காலண்டர்கள் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பலரகங்களின் பல விதங்களில் இங்கு காலண்டர்கள் தயார் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், சிவகாசியில் காலண்டர் உற்பத்தி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த வாரத்தில் இந்த பணி முடிவடைந்துவிடும் என்றும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version