இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்கள் உட்பட 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலையடுத்து ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமுள்ள மாவட்டங்களான பாரமுல்லா, சோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவத்தினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இம்மாவட்டங்களில் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர் . இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தின் கேரன் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 36 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version