எஸ்.பி.பி. உடல்நிலையில் திடீர் பின்னடைவு!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை தேறிவந்த நிலையில், திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பி-க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி. சரண் வீடியோ மூலம் தகவல் வெளியிட்டு வந்தார். ஒருவார சிகிச்சைக்கு அவரது உடல் நல்லபடியாக ஒத்துழைத்து வந்த நிலையில், ஆகஸ்ட் 14-ம் தேதி மீண்டும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பி-க்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பெறும் அறையில் அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாகவும், அதனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அவரது மகன் தெரிவித்தார். செப்டம்பர் 7ஆம் தேதி கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்.பி.பி., 14ஆம் தேதி மருத்துவர்கள் உதவியுடன் எழுந்து 15 முதல் 20 நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தார்.

இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Exit mobile version