சவுதி மன்னரை விமர்சித்து எழுதிய பத்திரிகையாளர் கொலை

சவுதி மன்னரை விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோர் கொலை செய்யப்பட்டிருப்பதை சவுதி அரேபிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2-ஆம் தேதி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோர் திடீரென மாயமானார். அதன் பிறகு அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

ஜமால் கஷோரை சவுதி அரசு கொலை செய்துவிட்டதாக தகவல் பரவியதை அடுத்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.

இந்தநிலையில் துணை தூதரகத்தில் நிகழ்ந்த வாக்குவாதத்தின்போது ஜமால் கிஷோர் கொலை செய்யப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து 18 பேரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் சவுதி அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

ஜமால் கிஷோரின் மரணத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வருத்தம் தெரிவித்திருப்பதுடன் உரிய விசாரணை நடத்தவும் வலியுறுத்தியுள்ளன.

Exit mobile version