சங்ககிரி.. பூனைக்குட்டி பிடித்து தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நடந்தது என்ன?

சங்ககிரியில் பூனைக்குட்டி பிடித்து தருவதாகக் கூறி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கூலித்தொழிலாளி சிக்கியது எப்படி? சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

12வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைதாகி இருக்கிறார் சேலம் மாவட்டம் சங்ககிரி வாணியர் காலனியைச் சேர்ந்த 55வயது கூலித்தொழிலாளி பூங்காவனம்.

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி, வாணியர் காலனி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியிடம் பூனைக்குட்டியை பிடித்து தருவதாக கூறியுள்ளார் பூங்காவனம். சிறுமியும் அதற்கு சரியென்று சொல்ல, பூனைக்குட்டியைப் பிடித்து கொடுக்கும் சாக்கில் சிறுமிக்கு பூங்காவனம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

பூங்காவனம் பூனைகுட்டி பிடித்து கொடுக்கும் சாக்கில் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கேட்டபோது, பூங்காவனம் அவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு சென்ற சிறுமியின் தாயார், பூங்காவனத்தின் செயல்குறித்து புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூங்காவனத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பாலியல் விவகார பூனைக்குட்டி வெளியே வர, பூங்காவனம் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

– சங்ககிரி செய்தியாளர் சி.நல்லமுத்து மற்றும் ஆசாத்.

Exit mobile version