இளைஞர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட மலர் டீச்சர் சாய் பல்லவி!

தமிழ்நாட்டில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் பலரையும் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. மலர் டீச்சராக நடித்து இளைஞர் பட்டாளங்களை காதல் மாணவர்களாக மாற்றிய சாய் பல்லவி பிறந்த தினம் இன்று. அவரை பற்றிய சிறிய கட்டுரை இதோ..

தமிழ்நாட்டிலுள்ள கோத்தகிரியில் 1992 ஆம் ஆண்டு பிறந்த சாய் பல்லவி, வளர்ந்தது படித்தது அனைத்தும் நம்ம கோயமுத்தூரில்தான். ஆரம்ப காலத்தில் கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள டிப்லிசியில் மருத்துவம் படித்து கொண்டிருந்தபோது இயக்குனர் அல்போன்சு புத்தரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம், திரைத்துறைக்கு அறிமுகமானார் சாய் பல்லவி.

பிரேமம் படத்தில் அவர் நடித்திருந்த மலர் கதாபாத்திரம் எத்தனையோ இளைஞர்களின் தூக்கத்தை களவாடிக் கொண்டது என்று தான் சொல்லவேண்டும். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது பிரேமம் படம், மலர் டீச்சராக நடித்து மக்கள் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, ’தமிழ் பெண்’ என்பதில் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம்.

2016 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த கலி திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 2017 ஆம் ஆண்டு காதல் படமாக வெளியான பிடா திரைப்படம் சாய் பல்லவிக்கு தெலுங்கிலும் நல்ல வெல்கம் படமாக அமைந்தது.

தமிழில் எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ’கரு’ திரைப்படம் மூலம் 2018 ஆம் ஆண்டு, தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் சாய் பல்லவிக்கு தமிழில் ஹிட் கொடுத்தது. இதில், அறாத்து பெண்ணாக வலம் வந்த சாய் பல்லவி, டான்ஷுடன் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.தொடர்ந்து தென்னிந்திய படங்களில் சிறப்பாக நடித்து வரும் தமிழ் பெண்’ சாய் பல்லவிக்கு, ரசிகர்களின் இதயங்களில் எப்போதும் தனியிடம் உண்டு என்றே கூறலாம்.

சாய்பல்லவியின் முகத்தில் இருக்கும் பருவிற்காக பல்வேறு விமர்சனத்திற்கு ஆளானபோது, அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் தன் இலக்கினை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். க்ரீம்களால் அழகு கூடும் என்று தான் நம்பவில்லை எனக்கூறி அதற்கான விளம்பர வாய்ப்புகளை தவிர்த்தது சாய்பல்லவி மீதான மரியாதையை அதிகரித்தது என்றே சொல்லலாம்.

31வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

– ராஜா சத்ய நாராயணன், செய்தியாளர்.

Exit mobile version