பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத பொது கிணற்றை தூர்வாரிய கிராம இளைஞர்கள்

சேலம் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத பொது கிணற்றை, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நைனாம்பட்டி கிராமத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்ட பொதுக்கிணறு, அந்த கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் கிணற்றின் சுற்றுச்சுவர் பாழடைந்ததால், பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில், கிராமத்தின் இளைஞர்கள் அமைப்பினர் இந்த கிணற்றை தூர்வார முடிவு செய்து, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமை அன்று கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மழை நீர் தற்போது கிணற்றுக்குள் சேகரமாகிறது. அனைத்திற்கும் அரசையே எதிர்பார்த்திராமல் தாமாக முன்வந்து இந்த பணியை மேற்கொண்ட இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Exit mobile version