மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி திரும்ப பெறப்பட்டது

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அந்த 9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் மொத்தமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் வகையில், முன்னர் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. புதிய தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version