இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே வழக்கு தொடர முடிவு

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கே உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். மேலும் நாடாளுமன்றத்தையும் முடக்கி உத்தரவிட்டார். அப்போதிலிருந்து இலங்கை அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.

ஜனநாயகத்தை அதிபர் சிறிசேனா நசுக்குவதாக உலகளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வரும் 14-ம் தேதி ராஜபக்சே நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருந்தது. பெரும்பான்மை கிடைக்கின்ற சூழல் அமையாததால் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் எனவும் அறிவித்தார். சிறிசேனாவின் இந்த முடிவை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டணி, ஜனதா விமுக்தி பெராமுனா உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது.

 

 

Exit mobile version