ராமநாதபுரத்தில் பழிக்குப்பழி -இரண்டு பேர் படுகொலை

ராமநாதபுரத்தில் பழிக்குப்பழி நடந்த சம்பவத்தில் ஜாமினில் வந்த இரண்டு பேர் பெட்ரோல் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுளனர்.

வாலாந்தரவையைச் சேர்ந்தவர்கள் கார்த்தி மற்றும் விக்கி . இருவரும் நிபந்தனை ஜாமீன் தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்தனர். டிஐஜி அலுவலகம் அருகே வந்துகொண்டிருந்த போது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த சிலர் இருவர் மீதும் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

இருவரும் நிலை தடுமாறிய போது துரத்தி வந்தவர்கள், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த கேணிக்கரை போலீசார் இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே விக்கி மற்றும் கார்த்தியை கொலை செய்து விட்டு தப்பமுயற்சித்த வாலாந்தரவையைச் சேர்ந்த முரளி, பாஸ்கரன், அர்ஜூன், ரூபன், முருகேசன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடந்த மே மாதம் 20 -ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்தி, விக்கியை பழிவாங்கும் நடவடிக்கையாக இச்சம்பவம் நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version