இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராஜபக்சவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரதமராக நேற்று முன்தினம் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவியேற்றார். இந்தநிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சவை சபாநாயகர் கரு.ஜெய சூரிய இன்று நியமித்துள்ளார்.
முன்னதாக இப்பதவியில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த இரா.சம்பந்தன் நீக்கப்பட்டார். ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்படும் என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான ராஜபக்சவுக்கு இந்த பதவி வழங்கப்படுவதாக சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.
ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்குவது எப்படி என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி யான சுமந்திரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை வரும் வெள்ளிக்கிழமை தீர்க்கப்படும் என சபாநாயகர் கரு.ஜெய சூரிய தெரிவித்துள்ளார்.