டாஸ்மாக் திறந்த முதல்நாளே கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு

சென்னை அம்பத்தூரை அடுத்த ஐசிஎஃப் காலனியில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த கோகுல் என்பவரை, குடிபோதையில் இருந்த சில இளைஞர்கள் தாக்கியுள்ளனர். கோகுல் அளித்த புகாரின் அடிப்படையில், ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குடி போதையில் இருந்த ஒருவரை பிடித்தனர். அங்கிருந்த தப்பியோடிய அந்த நபர் 4 பேர் கொண்ட கும்பலுடன் சென்று போலீஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், ஆட்டோ, வேன், கார் கண்ணாடிகளை உடைத்தும் அந்தக் கும்பல் ரகளையில் ஈடுபட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் உத்தனம்பட்டியில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அச்ச ராஜாக்கப்பட்டியை சேர்ந்த பெயிண்டர் கருப்பையா, கங்காதரன், சிரஞ்சீவி மற்றும் முருகேசன் ஆகிய 4 பேர் ஒன்றாக மது அருந்துபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சீரஞ்சீவி மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்பையா மற்றும் கங்காதரனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கங்காதாரன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மது போதையில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். பறக்கை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் மது வாங்கி வந்து குளக்கரை பகுதியில் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஸ்டாலின் மற்றும் சுரேஷ் என்ற இருவர் மதுபோதையில் ஐயப்பனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது நண்பரான சந்தோஷை அழைத்துச் சென்று ஐயப்பன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐயப்பன், சந்தோஷை சரமாரியாக குத்தினார். இதில் ஐயப்பன் சம்வ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்தை சந்தோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைமறைவான ஸ்டாலின் மற்றும் சுரேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் போதையில் இருந்ததாக தெரிகிறது. விளையாட்டின்போது ஏற்பட்ட மோதலில் முத்துக்குமார் என்பவர், மாடசாமி என்பவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி மண்டையை உடைத்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version