புல்வாமா தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்த 7 இளைஞர்கள் கைது

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு உதவியதாக 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 44க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் அரசு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு 80 கிலோ எடையுள்ள அதிக வீரியம் மிக்க ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருட்களை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக புல்வாமா மற்றும் அவந்திபுராவை சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலில் புல்வாமா மாவட்டம் காகாபோராவை சேர்ந்த அதில் அகமது என்ற இளைஞர் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் இணைந்துள்ளார். தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியை சேர்ந்த மிதூரா பகுதியில் தாக்குதலுக்கான திட்டமிடல் நடத்தப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version