சபரிமலையில் போராட்டத்தை தடுப்பதற்காக சரண கோஷம் போட காவல்துறை தடை விதித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் 2 ஐ.ஜிக்கள், 4 எஸ்.பிக்கள் தலைமையில் 5 ஆயிரத்து 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் 18-ம் படி அருகே நாம ஜெப போராட்டம் நடத்திய 69 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி சபரிமலை சென்றால் 6 மணி நேரத்தில் திரும்பி விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரண கோஷம் போடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.