ஆபாச வீடியோவைப் பகிர்ந்த 10 பேரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரம்

பேஸ்புக் மெசஞ்சரில் சிறுவர்களின் ஆபாச வீடியோவைப் பகிர்ந்த சென்னையைச் சேர்ந்த 10 பேரைக் கைது செய்வதற்கான முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

சிறுவர் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்பவர்களின் பட்டியலைக் காவல் துறையினர் தயாரித்துள்ளனர். இதன் அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். கிறிஸ்டோபர் பேஸ்புக் மெசஞ்சரில் தனியாகக் குழு நடத்தி, அதில் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் தன் பெயரை மறைத்து அமுதன், நிலவன் என்ற போலி பெயர்களில் வீடியோக்களை பரப்பி வந்துள்ளார். இது போல சிறுவர் ஆபாசபடங்களை பரப்பிய நூற்றுக்கு மேற்பட்டோரின் பெயர்ப் பட்டியலை வைத்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் வீடியோக்களை அதிகம் பகிர்ந்த சென்னையைச் சேர்ந்த பத்து பேரைக் கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version