போக்சோ மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்கும் போக்சோ மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை மேலும் கடுமை ஆக்குவதற்காக, இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தீவிர பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்தம் சேர்க்கப்பட்டது. குழந்தைகளுடைய ஆபாசப்படம் தொடர்பான குற்றங்களுக்கு தண்டனை விவரங்களும் சேர்க்கப்பட்டன.

இந்த ‘போக்சோ’ திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று விவாதத்துக்கு வந்தது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, அனைத்து குழந்தைகளுக்கும் சட்ட பாதுகாப்பு அளிக்கும் இம்மசோதாவானது, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. ஏற்கனவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டதால், விரைவில் சட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.

Exit mobile version